தேர்தல் தினத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான சமர்ப்பணம் அனைத்தும் நேற்றைய தினம் நிறைவடைந்தன.
இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை தொடர்வதா இல்லையா என்பது குறித்து இன்றைய தினம் (02) பிற்பகல் மூன்று மணிக்கு உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த உத்தேசித்து, தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது.
எனினும் கோவிட்19 அச்சுறுத்தல் இன்னும் தணிக்கப்படாத நிலையில், குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்து, அந்த வர்த்தமானியை ரத்து செய்யக்கோரி, அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் கடந்த 10 நாட்களாக உயர் நீதிமன்றின் 5 நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், இந்த மனுக்கள் குறித்த தமது முடிவை அறிவிக்கவுள்ளது.