தெற்கு பசிபிக் நாடான நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதன்முறையாக கொரோனா தொற்று பதிவானது. சுமார் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் 1,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 22 பேர் உயிரிழந்தனர். 1,482 பேர் பூரண குணமடைந்தனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 7 வாரங்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன . கடந்த மே 14ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. கடந்த 17 நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. கடந்த ஒரு வாரமாக 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நோயாளி குறித்த தகவல்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டுமென்பதால் மேலதிக விபரங்களை நியூசிலாந்து அரசு வெளியிடவில்லை.
நியூசிலாந்தின் சுகாதாரத்துறை இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மைல்கல் உண்மையில் நல்ல செய்தி. ஒட்டுமொத்த நியூசிலாந்தின் இதயத்தில் இருந்து நிகழ்த்தப்பட்ட சாதனை. பெப்ரவரி 28ஆம் திகதிக்கு பிறகு முதன்முறையாக கொரோனா நோயாளிகளும் இல்லையென்பது எங்கள் பயணத்தின் குறிப்பிடத்தக்க அடையாளம். ஆனால் நாங்கள் முன்னரே கூறியபடி, கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்வது அவசியம்.” என தெரிவித்திருந்தார்.
நியூசிலாந்து நான்கு கட்ட ஊரடங்கு தளர்வில் கடைசியான குறைந்த பாதிப்பு நிலை ஒன்றுக்கு செல்வதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்ததாவது,
"உலகளாவிய தொற்று நோய்க்கு மத்தியில் வாழ்க்கை இயல்பானதாக உணர்கிறது. இப்போது நாம் நிலை ஒன்றுக்கு செல்ல அமைச்சரவை ஒப்புகொண்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் கூடுவதற்கும், சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. அனைத்து வாகனங்களும் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.