ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை அடிப்படைவாத கருத்துக்களை கொண்ட சர்வதேச முஸ்லிம் தலைவர்களோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உறவினர் ஒருவர் கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தில் சேவையாளர் ஒருவர் மற்றும் இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என். எம் அமீன் ஆகிய நபர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஞானசார தேரர் ஆணைக்குழுவில் காட்சிப்படுத்தினார்.
சாட்சி பதிவுகளை ஆரம்பித்த ஆணைக்குழு ஞானசார தேரரிடம் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் முதலாவதாக எப்போது தகவல் கிடைத்தது என கேள்வியெழுப்பியது. இதற்கு பதில் அளித்த ஞானசார தேரர் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தும்முல்ல சம்புத் தத்வ ஜயந்தி இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா காரியாலயத்துக்கு 4 முஸ்லிம் இளைஞர்கள் வருகை தந்து தன்னை சந்தித்ததாக குறிப்பிட்டார்.
இதன்போது வகாப் வாதம் காரணமாக வெகு சீக்கிரம் நாட்டில் பிரச்சினை ஏற்படுமென அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இது குறித்து எங்களுக்கு கதைக்க முடியாது. இப்போது வரை எங்களில் ஏழு எட்டு பேரை கொலை செய்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். என்பதாக அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஞானசார தேரர் ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டார்.
இதன்போது உங்களை காண்பதற்காக வருகை தந்த நபர்களின் பெயர்களை குறிப்பிடும்படி ஆணைக்குழு கோரியது. குறித்த நபர்களுக்கு தற்போதும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அதனால் பெயர்களை இரகசியமாக ஆணைக்குழுவுக்கு வழங்குவதாக ஞானசார தேரர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட பிரதான 4 குழுக்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
தப்லீக் ஜமாஅத் வாதம், வகாப் வாதம், சலஃபி வாதம், ஜமாஅத்தே இஸ்லாம் ஆகிய வாதங்களை கொண்ட குழுக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு பெயர்களில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு கோதுமை மாவே பயன்படுத்தப்படும். அதேபோன்று இந்த குழுக்களும் வெவ்வேறு பெயர்களில் ஒன்றுகூடி செயற்பட்டு வருவதாக ஞானசார தேரர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டார்.
அதேபோன்றே சஹ்ரான் என்ற நபர் உருவாவதற்கும் அவர் ஒரு குழுவை உருவாக்குவதற்கும் ஜமாஅத்தே இஸ்லாம் வாதம் என்ற ஒன்றே அடிப்படையானது என ஞானசார தேரர் இங்கு குறிப்பிட்டார்.
கடவுளுக்காக எந்தவொரு தருணத்திலும் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று ஜமாஅத்தே இஸ்லாம் கொள்கை கொண்டவர்கள் ஜிகாத்தை பரப்புவதாகவும் ஞானசார தேரர் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.
பேருவளையில் உள்ள ஜாமியா நளீமியா இஸ்லாமிய நிறுவனம் இவ்வாறான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதில் கல்வி கற்பவர்கள் உயர்தர கல்விக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டார்.
இவ்வாறு கல்வி கற்றவர்கள் தற்போது தொழிலுக்காக இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான நான்காயிரம் நபர்கள் உள்ளதாகவும் அவர்களில் சிலர் அரச இஸ்லாமிய பாட புத்தகத்தை தயாரிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சாட்சி வழங்கிய ஞானசார தேரர் தெரிவித்தார்.
அதற்கமைய 9ஆம் வகுப்பு 12ஆம் மற்றும் 13ஆம் வகுப்பு இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் எகிப்தின் இவான் முஸ்லிம் அமைப்பின் தலைவரின் கற்கை நெறிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெளிவுப்படுத்தினார்.
இதேவேளை 13ஆம் தர இஸ்லாமிய ஆசிரியர் வழிகாட்டி புத்தகத்தில் 43, 63, 109 மற்றும் 123ஆம் பக்கங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.