கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த கடிதத்தில் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து இலங்கை முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள தூதுவர்கள் இந்த விடயத்தை ஒளிவுமறைவின்றி அணுக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொவிட் 19 நெருக்கடியின் போது ஜனாதிபதியின் முன்னுதாரணமான தலைமைத்துவத்தை பாராட்டியுள்ள 16 நாடுகளின் தூதுவர்கள் அதேவேளை கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் குறித்த விவகாரம் தங்களின் நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை இந்த எதிர்பாராத நெருக்கடியை கையாண்டவிதம் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயம் எமது கவனத்தை ஈர்த்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதுவரையில் உயிரிழந்த மூன்று முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், பொது சுகாதார செயற்பாட்டாளர்கள், மருத்துவ துறையினரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் தனிநபர்களும் சமூகங்களும் தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்பதை தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கலாம் என தெரிவிக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றனர் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் பொது சுகாதாரம் குறித்து முழுமையாக கவனத்தில் எடுக்கப்பட்டவையாக உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர்கள் உலகளாவிய நோய் தொற்றின் போது உலக நாடுகளில் இறந்தவரின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்தல் என்பது உயிரிழந்தவரின் மத நம்பிக்கையை கணக்கிலெடுப்பதன் மூலமும் உடலின் புனிதத்தன்மை மற்றும் மரியாதையை நிலை நிறுத்துவதன் மூலமும் தீர்மானிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.
இது மக்களின் தலைவர்கள் மிக அதிகளவான பொறுப்புணர்வு மற்றும் தலைசிறந்த தலைமைத்துவத்துடன் உடலை புதைப்பதால் வைரஸ் பரவுகின்றது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தொடர்பான விவகாரம் இலங்கையிலும் உலக நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகின்றது என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.