பாடசாலைக் கல்வித் துறையில் உடனடியாக மூன்று மாற்றங்களை மேற்கொள்வதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதிகளைப் பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கல்வித் துறையில் உடனடியாக மேற்காெள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக கல்வி அமைச்சரிடம் வினவப்பட்டது.
அதற்கு கல்வி அமைச்சரின் பதில் கீழ்கண்டவாறு அமைந்திருந்தது.
நான் மிகவும் விருப்பத்துடன் பதிலளிக்கக் கூடிய வினாவைத் தொடுத்துள்ளீர்கள்.
1. முதலாவது, தற்போது 273 ஆகக் காணப்படும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல். இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
*தற்போதைய தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 273 தானா? என்ற சந்தேகம் வலுவாக வந்தால் கல்வி அமைச்சின் தரவுகளை ஒரு முறை சரி பாருங்கள்.
2. இரண்டாவது இஸட் புள்ளி முறை. இதனை நாங்கள் மீள்பரிசீலனை செய்வோம். தற்போதைய இஸட் புள்ளி முறை 40 வீதம் தேசிய திறமைக்கும் 55 வீதம் மாவட்ட திறமைக்கும் 5 வீதம் கஷ்டப்படும் பிரதேச மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒதுக்கீட்டில் பிரச்சினை இல்லை. தனிப்பட்ட வகையில் நான் அதனை 50 வீதமாக அதிகரிப்பதை விரும்புகிறேன். ஆனால் மாவட்ட திறமை அடிப்படையிலான ஒதுக்கீட்டில் பாரியளவிலான பிரச்சினை உள்ளது. உதாரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஆனந்த, ரோயல், தேவி, விசாகா முதலான பிரபல்ய பாடசாலைகளுடன் அவிஸ்ஸாவெல்ல பகுதியில் காணப்படும் பின்தங்கிய பாடசாலைகளும் கொழும்பு மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு போட்டி போட வேண்டியுள்ளது.
உயர்ந்த தரத்திலான பாடசாலைகளுக்கும் வசதி குறைந்த பாடசாலைகளுக்கும் ஓரே இஸட் புள்ளி. இதனை மாற்ற வேண்டும்.
இதற்கான அனுமதி ஏற்னவே பெறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து இஸட் புள்ளி முறையை மீளாய்வு செய்ய குழு ஒன்றை நியமித்துள்ளோம். இதனை நீதியாக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
3. மூன்றாவது, எம்மிடம் உள்ள 240,000 ஆசிரியர்களில் 12 வகையினர் உள்ளனர். இது துரதிஷ்டமான நிலமையாகும். நாம் அனைத்து ஆசிரியர்களையும் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக்குவோம். அவர்களை வாண்மையாளர்களாக மாற்றுவோம்.
இரண்டு வருட கற்கையையும் ஒரு வருட கற்பித்தல் பயிற்சியையும் வழங்கும் 20 பீடங்கள் தற்போதுள்ளன. நாம் இதற்கான கொள்கைத் தீர்மானத்தைப் பெற்றுள்ளோம். அத்தோடு நான் அமைச்சரவை அனுமதியையும் இதற்காகப் பெற்றுள்ளேன்.
நாம் கற்கையை நீடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இரண்டு வருடம் மூன்று வருடங்களாக நீடிக்கப்படும். அவர்கள் கல்விமாணி பட்டத்தைப் பெறுவார்கள். இது கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கும் கல்விமாணிக்கு சமனானதாகும். இந்த வகை பட்டக் கற்றையை ஒன்லைனில் பின்தொடர்ந்து அதே பட்டத்தைப் பெறும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் வெற்றி பெறுமாக இருப்பின், 2027 ஆம் ஆண்டளவில் நாம் இந்த உலகிற்கு ஒரு பெருமைக்குரிய செய்தியை வழங்கலாம். எமது நாட்டில் அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாவர் என்ற செய்தியை வழங்கலாம்.
ஏனெனில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஆசிரியர் நியமனத்திற்கான பொதுவான அளவு கோல் பட்டமாகும். இது எமது மூன்றாவது முதன்மையாகும். என செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.