அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செயற்பாடுகள் முடிந்த கையுடன் இரண்டு வாரங்களுக்கு நாடு முடக்கப்படும் (Lock Down) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் பீடத்தின் தகவலை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அறிவிக்கப்பட்டுள்ள பொது தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் பூர்த்தியானதும், முழு நாட்டையும் இரண்டு வாரங்களுக்கு ஸ்தம்பிக்க செய்யும் வகையில் முடக்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த இரண்டு வார காலமும் ஊரடங்கு போன்ற ஒரு நிலைமை நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும். மக்களின் நடமாட்டம் முழுமையாக முடக்கி ஸ்தம்பிக்க செய்யப்படும்.
மிக அத்தியாவசிய சேவைகளைத்தவிர ஏனைய அனைத்தும் இடைநிறுத்தப்படும். முப்படையினர், பொலிஸ் உள்ளிட்ட அரசின் முழு அங்கங்களையும் முழு வீச்சில் களத்தில் இறக்கவும் அரச உயர்பீடம் தீர்மானித்திருக்கின்றது.
மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் மேற்கு நாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்த சுமார் 110 பேரை தேடிக்கண்டறிய முடியாத நிலையில் அவர்கள் மக்கள் மத்தியில் சேர்ந்து இருக்கின்றார்கள் என கூறப்படுகின்றது.
இவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் மூலம் வேறு யார் யாரேனுக்கும் அது பரவியிருந்தால் அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து கண்காணிப்புக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை இரும்புக் கரம் கொண்டு முன்னெடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
தொடர்ந்தும் முன்னேற்பாடாக முதலில் தேர்தல் ஆணையம் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு படையினர் உள்ளிட்ட தரப்புகளுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கவும், அவசியம் ஏற்பட்டால் அவசரகால நிலை பிரகடனம் செய்யவும் தொடர் நடவடிக்கைகளுக்கு அவசியம் ஏற்பட்டால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கும் அதிகார தரப்பு தயாராக இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தகவல் - Tamilwin
#yazhnews #lka #tamilnews #coronavirus #lockdownsl