இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய அந்த சம்பவம் நடந்து சுமார் 8 வருடங்களை எட்டிவிட்டது.
2012 டிசம்பர் 16ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. டெல்லியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள முனிர்கா பகுதியில்தான் பேருந்தில் அந்த கூட்டு பலாத்காரம் நடந்தது.
தனது நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டு இருந்த நிர்பயா கொடூரமான 6 பேர் கொண்ட குழுவால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். டெல்லியில் ஓடும் பேருந்தில் மிக மோசமாக நிர்பயா துன்புறுத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
யார் குற்றவாளிகள்!
பேருந்தில் இருந்து இவரின் உடலை வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து குற்றவாளிகள் 6 பேரும் தப்பித்து சென்றனர். இந்த கொலை நாட்டையே உலுக்கியது. இதில் மிக மோசமாக காயம் அடைந்த நிர்பயா முதலில் டெல்லியில் சிகிச்சை பெற்றார். ஆனால் டெல்லியில் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இதையடுத்து அவசர அவசரமாக இவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலியானார்!
இரண்டு நாட்கள் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதன் பின் டெல்லி முழுக்க கடுமையான போராட்டங்கள் நடந்தது. உலக மீடியாக்கள் இந்தியாவை மிக மோசமாக விமர்சனம் செய்தது. அதன்பின்தான் அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு!
2013 ஜனவரியில் தொடங்கிய இந்த 6 பேருக்கு எதிரான சட்ட போராட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் இன்னொரு இளம் வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த ஆறு பேரில் ராம் சிங்தான் முக்கிய குற்றவாளி. ஆனால் அவன் 2013 மார்ச் 11ம் தேதி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான்.
தற்கொலை செய்தான்!
இந்த தற்கொலை உண்மையில் தற்கொலை இல்லை, கொலை என்று இப்போதும் கூட சந்தேகம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னொரு இளம் வயது குற்றவாளி 2015 டிசம்பரில் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டான். இதில் மீதமுள்ள குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருந்தனர். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை கொடுத்தனர்!
திகார் சிறையில் இவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உத்தரவிட்டபட்டது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதலில் இவர்களை தூக்கில் போட ஜனவரி மாதம் 22ம் தேதி நாள் குறிக்கப்பட்டது.ஆனால் இதற்கு எதிராக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்த குற்றவாளிகள், தேதியை தள்ளிப்போட வைத்தனர். ஆனால் டெல்லி ஹைகோர்ட்டிலும் இவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
சட்ட போராட்டம்!
அதன்பின் உயிருக்கு ஆசைப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் அங்கும் மனு மற்றும் மேல்முறையீடு மனு, மறுசீராய்வு மனு என்று எதுவும் குற்றவாளிகளுக்கு சாதகமான முடியவில்லை.அதன்பின் கடைசியாக ஆளுநர், உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி பார்த்தனர். அதுவும் குற்றவாளிகளுக்கு பலன் அளிக்கவில்லை. அதன்பின் மீண்டும் சர்வதேச நீதிமன்றம் வரை சென்றார்கள்.
இன்று தூக்கு!
அதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.இன்றும் கூட குற்றவாளி பவன் குப்தா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் நடந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது.அதிகாலை 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை அவசர அவசரமாக நடந்தது. இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகாலை 3.30 மணிக்கு தீர்ப்பை வழங்கியது.
அதில் 4 குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரித்தது தவறு இல்லை. அவர்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. தூக்கு தண்டனையை இன்றே நிறைவேற்றலாம் என்று உத்தரவிட்டது.
தண்டனை நிறைவேறியது!
இதையடுத்து நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.