629 இளம் பெண்கள் சீன ஆண்களுக்கு மணமகள்களாக விற்பனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

629 இளம் பெண்கள் சீன ஆண்களுக்கு மணமகள்களாக விற்பனை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம் பெண்கள் சீனாவில் உள்ள ஆண்களை திருமணம் செய்வதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தான் பெண்களின் பட்டியலொன்றில் 629 பெண்களின் பெயர்கள் உள்ளன. பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகளால் தொகுக்கப்பட்ட இப்பட்டியலை தான் பெற்றுக்கொண்டதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் குஜ்ரான்வாலா நகரில் கடந்த மே 22 ஆம் திகதி, பெண்ணொருவர் தனது சீனக் கணவனின் படத்தை காண்பித்தபோது,


சீனாவில் குழந்தைப் பிறப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டதால், அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போது சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது. இதனால் மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் வறிய குடும்பங்களைக் குறிவைக்கும் சீன ஆண்கள், முகவர்கள் மூலம் பணத்தைக் கொடுத்து பெண்களை திருமணம் செய்கின்றனர். பெரும்பாலும் வறிய நிலையிலுள்ள சிறுபான்மை மத சமூகமொன்றைச் சேர்ந்த குடும்பங்களே இலக்கு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீன ஆண்களுக்கு திருமணம் செய்யப்பட்டு பெண்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு சென்றதும்தான் அப்பெண்கள் மொழி தெரியாத நிலையில், பலர் அடிமைகளை போன்று நடத்தப்படுகிறார்கள் என செய்­திகள் அண்மையில் வெளியாகியிருந்தது.

சீனர்களுக்கு விற்கப்பட்ட பெண்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள்,

இத்தகைய திருமணத்தின் பின்னர் பாகிஸ்தானில் வைத்தும் சீன ஆண்கள் பலரால் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது. இத்தகைய எல்லை மீறல்களை பாகிஸ்தான் மீது சீனா நடத்தும் மனிதக்கடத்தல் என்று தான் வகைப்படுத்த வேண்டும் என பாகிஸ்தானிய மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடத்தப்பட்ட பெண்கள் குறித்த விவரத்தை அசோஷியேடெட் பிரஸ் (ஏ..பி) செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பெண்கள் அனைவரும் சமீபத்தில் திருமணமானவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் எந்த விமான நிலையத்திலிருந்து சென்றார்கள், அவர்களுடைய தேசிய அடையாள எண், கணவர் பெயர் மற்றும் திருமணமான திகதி முதலிய விவரங்களும் கிடைத்துள்ளன. இப்பட்டியலிலுள்ள பெண்கள் அனைவருக்கும் 2018 முதல் ஏப்ரல் 2019க்குள் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களை அவர்களுடைய பெற்றோர் கணவன்மார்களுக்கு திருமணம் என்ற பெயரில் விற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தப் பெண்களைக் கடத்தியவர்கள் 40 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர். காசுக்கு ஆசைப்படும் பெண் வீட்டாருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்கள் என கூறினார்.

இந்த விசாரணையில் கிடைக்கும் விவரங்களை வெளியிட்டால் முக்கியமான விஷயங்களில் பாகிஸ்தான் சீனாவுடன் கொண்டிருக்கும் உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அரசு அதிகாரிகளுக்கு இதைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடத்தல் வலையமைப்புகளைப் பின்தொடரும் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து விசாரணைகளை கைவிட அரசாங்கம் முயன்றுள்ளது என்று சீனாவில் இருந்து பல இளம் சிறுமிகளை மீட்க பெற்றோருக்கு உதவிய ஆர்வலரான சலீம் இக்பால், ஏ.பி செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.


கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் சிலர் கடந்த மே 11 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் நகரிலள்ள நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது,

கடத்தப்பட்ட பெண்கள் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள். சீனக் கணவனால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலாளியாக்கப்படுகிறார்கள். பல்வேறு வன்கொடுமைகளில் சிக்கி அவதிப்படும் இத்தகைய பெண்கள் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தங்களை மீட்குமாறு கெஞ்சுகின்றனர்.

சீனாவுக்கு பாகிஸ்தான் பெண்களை கடத்தும் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பபடும் 31 சீன ஆண்கள் பாகிஸ்தானின் பைஸலாபாத் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் மேற்படி 31 சந்தேக நபர்களையும் பைஸலாபாத் நீதிமன்றம் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரினால் விசாரிக்கப்பட்ட பல பெண்கள், பின்னர் சாட்சியமளிக்க முன்வரவில்லை எனவும் அவர்கள் அச்சுறுத்தப்பட்டமையோ அல்லது லஞ்சம் வழங்கப்பட்டமையோ இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் நீதிமன்ற அதிகாரி ஒருவரும் விசாரணையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவரும் தெரிவித்ததாக ஏ.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இவ்விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் மறுப்புத் தெரிவித்ததாகவும் ஏ.பி.நிறுவனம் தெரிவித்துள்ளது.

-metronews

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.