
பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்டுத்துபவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் அண்மையில் புயலைக் கிளப்பியது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உளவு பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான பெகாசஸ் மென்பொருளை விற்ற இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒருமுறை சைபர் தாக்குதலுக்கு வாட்ஸ்அப் இலக்காகியுள்ளது. வாட்ஸ்அப்பிற்கு எம்.பி.4 வகை காணொளி ஒன்றை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்கள் தகவலை திருடும் அபாயம் உள்ளதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வாட்ஸ்அப் தகவல்கள் மட்டுமின்றி செல்போனில் உள்ள தகவல்களும் திருடு போகக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Android, IOS இயங்குதளங்களை பயன்படுத்தும் செல்போன்கள் இந்த வைரசால் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எந்தெந்த இயங்குதளங்களை பயன்படுத்தும் தொலைபோசி பாதிக்கப்படும் என்ற விவரத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் எப்படி கண்டறியப்பட்டது என்ற விவரத்தை பேஸ்புக் நிறுவனம் வெளியிடவில்லை. இந்த இணையத் தாக்குதலில் இருந்து தற்காலிகமாக காத்துக் கொள்ள Google Play Store சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.