
அண்மைய காலங்களில் மானிப்பாயில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அதனையடுத்து வடக்கு மாகாண மூத்தப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ சிறப்புக் கவனம் எடுத்திருந்தார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
புத்தாண்டு விடுமுறைகளையும் தவிர்த்துப் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசிகளில் இருந்து ஏராளமான ஒளிப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வாள்களுடன் பல பேரின் ஒளிப்படங்களும், பெயர்கள் பொறிக்கப்பட்ட வாள்களின் ஒளிப்படங்களும் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ள பொலிஸார் அவற்றின் அடிப்படையிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கும், தற்போது வாள் வெட்டுக் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள விக்ரர் என்ற நபருக்கும், வேறு குழுக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விக்ரர் என்ற நபரின் பெயர் பொறிக்கப்பட்ட வாள்களின் ஒளிப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், ஒளிப்படங்களை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்தக் குழுவின் பிரதான நபர் என்று கருதப்படும் கைதடியைச் சேர்ந்த ஒருவரும் தேடப்பட்டு வருகின்றார். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ நேற்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை கண்காணித்தார். பொலிஸார் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். ஒளிப்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்வதற்கான பணிப்புரைகளையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.