கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் சிக்கிய பிரித்தானிய பிரஜை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் சிக்கிய பிரித்தானிய பிரஜை!


இலங்கையில் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதற்காக முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பிரித்தானிய பிரஜையான 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி தோட்டாக்கள், 'ரம்போ' வகையைச் சேர்ந்த கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வதாக இருந்தால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டரீதியான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


எனினும் குறித்த வெளிநாட்டு பிரஜை எவ்விதமான அனுமதியையும் பெறாமல் கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


நேற்று (22) பிற்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.


இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கேன் செய்த போது, இந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து, குறித்த பயணப் பொதியை எடுத்து வந்த பிரித்தானிய பிரஜை விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பயணியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். குறித்த கைத்துப்பாக்கியை தனது பாட்டி தனக்கு ஒரு கலைப்பொருளாக பரிசளித்ததாக கூறியுள்ளார்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.