அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒரு சில அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை எனவும், அவர்கள் தொடர்பில் இந்த புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் கடுமையான தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் அரச வரிகளை அறவிடும் முறைமையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், எனவே நாட்டின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்தானந்த அலுத்கமகே இதனைத் தெரிவித்தார்.