டைட்டன் நீர்மூழ்கி புறப்படுவதற்கு முன்பாகவே தான் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும்! -ஜேம்ஸ் கேமரூன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டைட்டன் நீர்மூழ்கி புறப்படுவதற்கு முன்பாகவே தான் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும்! -ஜேம்ஸ் கேமரூன்

டைட்டன் நீர்மூழ்கி புறப்படுவதற்கு முன்பாகவே அதுகுறித்துத் தான் வெளிப்படையாக அதிகம் பேசியிருக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கேமரூன் கூறுகிறார்.

டைட்டன் நீர்மூழ்கியின் விபத்தை டைட்டானிக் விபத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். அப்போது, டைட்டானிக் கப்பல் எச்சரிக்கைகளை புறக்கணித்து முன்னேறியதோ, அதேபோல் டைட்டன் நீர்மூழ்கியும் எச்சரிக்கையை புறக்கணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று அவர் பேசியுள்ளார்.

சுற்றுலா, தொழில், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நீர்மூழ்கிக் கப்பல்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம், “இதைச் செய்திருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார். ஆனால், “அவர்கள் அதற்கான அங்கீகார சான்றிதழைப் பெறவில்லை என்பது அவருக்குத் தெரியாது.”

கேமரூன் டைட்டன் நீர்மூழ்கியின் துயர சம்பவத்தை டைட்டானிக் விபத்துடன் ஒப்பிடுகிறார். “இது புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகளால் நிகழ்ந்த சோகம்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் ராய்ட்டர்ஸிடம், “அந்த(டைட்டானிக்) கப்பல் கடலின் அடிப்பகுதியில் கிடக்கிறது. அதற்குக் காரணம் அதிலுள்ள பொருட்களின் தன்மை இல்லை. மோசமான அந்தக் கடல்வழியின் காரணமாகவே அங்கு கிடக்கிறது,” என்று கூறினார்.

கேப்டனுக்கு அந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பாதையில் பனிப்பாறைகள் இருந்தன. அது ஒரு அமாவாசை இரவு. அவர் எந்தக் காரணத்திற்காகவோ முன்னேறிச் சென்றார்.”

இப்போது அதே இடத்தில், “அதே மோசமான காரணத்திற்காக, டைட்டானிக்கின் சிதைவுக்கு அருகிலேயே இன்னுமொரு சிதைவு உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையே கடலுக்கு அடியில் பல மீட்டர் ஆழத்தில் உள்ள இறந்தவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டு வந்து அவர்களது குடும்பத்திடம் ஒப்படைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உலகின் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி விபத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஓஷன்கேட் நிறுவனம் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

டைட்டானிக் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஓஷன்கேட்டின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கூறியிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த சுற்றுலா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை தெரிவித்த முதல் நபர் ஜேம்ஸ் கேமரூன் இல்லை.

கடல் தொழில்நுட்ப சமூகம்(Marine Technology Society, MTS) கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓஷன்கேட் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதியது.

இந்தக் கடிதத்தை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் கடிதம், “இந்த நீர்மூழ்கியின் பரிசோதனைக்கு ஓஷன்கேட் நிறுவனம் கடைபிடித்த அணுகுமுறை, எதிர்மறையான விளைவுகளை, மிதமானது முதல் ஆபத்தான விளைவுகள் வரையிலுமே ஏற்படுத்தலாம்” என்று குறிப்பிட்டது.

இதுதவிர, அமெரிக்க நீதிமன்ற ஆவணத்திலும் பாதுகாப்பு குறித்த கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் வழி ஆகியவற்றைக் கொண்டு பேரழிவு நடந்திருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

"என்ன நடந்தது என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன். நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது"

"ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் உள்ள எனது தொடர்புகள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் வழிதவறினர். அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்"

"அவர்களின் தொடர்பு சாதனங்கள் தொலைந்துவிட்டன, வழிசெலுத்தும் அமைப்பு தொலைந்துவிட்டது. நான் உடனடியாக சொன்னேன், ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது. அப்போது எனது நினைவுக்கு வந்தது 'வெடிப்பு"

ஜேம்ஸ் கேமரூனின் விமர்சனத்திற்கு ஓஷன்கேட் இணை-நிறுவனர் பதிலடி
டைட்டன் நீர்மூழ்கியின் விபத்து குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள ஓஷன்கேட் நிறுவனத்தின் இணை-நிறுவனர் கில்லெர்மோ சோன்லின், அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

ஓஷன்கேட் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் அங்கீகார சான்றிதழ் தொடர்பான விசாரணையின்கீழ் உள்ள நிலையில், அவரது இந்த எதிர்வினை வந்துள்ளது.

சோன்லின், 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டார் என்றாலும், அந்த நிறுவனத்தின் பங்குகள் சில அவர் வசம் இன்னும் உள்ளது.

பிபிசி ரேடியோ 4இன் நிகழ்ச்சியில் அவர், டைட்டனின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் அது பற்றிய முழுமையான தகவல்கல் இல்லை என்று கூறினார்.

விமர்சித்தவர்களில் டைட்டானிக் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ஒருவர்.

சோன்லின், “மக்கள் சான்றிதழை பாதுகாப்போடு தொடர்புபடுத்துகிறார்கள். அதோடு, டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்குவதற்கான 14 ஆண்டு செயல்முறையைப் புறக்கணிக்கிறார்கள்,” என்று கூறுகிறார்.

“ஜேம்ஸ் கேமரூன் உட்பட இதுகுறித்துப் பேசும் அனைத்து நிபுணர்களும் நீர்மூழ்கி உருவாக்கப்பட்டபோது அந்த இடத்தில் இருக்கவில்லை என்பதையும், பொறியியல் செயல்முறையின் ஒரு பகுதியாக அவர்கள் இருக்கவில்லை என்பதையும், அது நிர்மாணிக்கப்பட்டபோது அவர்கள் யாரும் நிச்சயமாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்வார்கள்,” என்று அவர் கூறினார். இந்த நீர்மூழ்கி கடுமையான தணிக்கை நடைமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.

இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

கடலுக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் உள்ள உயிரிழந்தவர்களின் உடலை மீட்கப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்று அமெரிக்க கடலோரப் படை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்கள், “கடலின் அடிமட்டத்தில் நம்ப முடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவுகிறது” என்று தெரிவித்தனர். நிபுணர்களின் கருத்தும், கடலோரப் படையின் கருத்தை அமோதிப்பதாகவே உள்ளது.

பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தின் எடைக்கு சமமான நிறை நீர்மூழ்கியில் நிலவுகிறது என்று இதை விளக்குகிறார் கடல்சார் தன்னாட்சி அமைப்பின் பேராசிரியர் பிளேர் தோர்ன்டன்.

மேலும், நீர்மூழ்கியின் கட்டமைப்பு அதில் பயணித்தவர்களை காத்து வந்தது. ஆனால், கடல் நீரின் வேகமான ஓட்டத்தால் ஏற்படும் 10 ஆயிரம் டன் எடைக்கு இணையான சக்தி அந்தக் கட்டமைப்பை ஒரு நொடியில் என்ன செய்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் என்கிறார் அவர்.

இறந்தவர்களின் உடலை மீட்கும் நோக்கில், அவர்களின் உடல்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உடனே செல்வது மிகவும் கடினம் என்கிறார் தடயவியல் மற்றும் மரபியல் பேராசிரியரான டெனிஸ் கோர்ட்.

எனவே சிறிய நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக, அதில் பயணித்து இறந்தவர்களின் உடல்களை அவர்களின் அன்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் மிக குறைவு என்கிறார் அவர்.

-பிபிசி 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.