![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIVJqBN_dU-1OQRMghvAo1hv3rcOaXHt4srPW-mHG6xr1ssnn9xvwdiK_sqjYzXRK0_19RO2WbNG2Y_8fITpqaNdwjO1uGOaxGXcqUrrzqGu5LQQdtNhKEPe0ocb9mrjmPcGDe_c7lS_cNUReUIT5BTyj46iGHHPgj44_yAoXY-fAdZBuX0jUCvCYfzA/s16000/99711AD4-06EC-404E-BAC3-0D575FD5219E.jpeg)
ஆர்.சி.பி., எல்லாம் ஒரு அணியா எனப் பேசிய ரோகித் சர்மா ரசிகரை விராத் கோலி ரசிகர் அடித்தே கொன்றுள்ளார். நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்தச் சம்பவம் இந்தியா, தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிட்கோ தொழிற்சாலை அருகே இளைஞர் ஒருவர் புதன்கிழமை காலை சடலமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற சிட்கோ தொழிலாளர்கள் இது குறித்து கீழப்பலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் சடலமாக கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, உடல்கூராய்வு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சடலமாக கிடந்த இளைஞர், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சடலமாக கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான பி. விக்னேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், கொலைக்கு காரணமான தர்மராஜை (21) வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறுகையில், “தர்மராஜூவும், விக்னேஷிம் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (அக்.11) இரவு மது அருந்தி விட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்தப் பேச்சு ஐ.பி.எல்., தொடர்பாக செல்லும்போது யார் சிறந்த வீரர்? விராத் கோலியா, ரோகித் சர்மாவா என்ற பேச்சு எழுந்துள்ளது. அப்போது விராத் கோலிக்கு ஆதரவாக தர்மராஜூம், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக விக்னேஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில், ஆத்திரமடைந்த விராத் கோலி ரசிகர் தர்மராஜ், ரோகித் சர்மா ஆதரவாளர் விக்னேஷை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமுற்ற விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அங்கிருந்து தர்மராஜ் தப்பித்து ஓடிவிட்டார்” என்றனர்.
ரோகித் சர்மா ஆதரவாளரான விக்னேஷ், தர்மராஜ்-யை பாடி ஷேமிங் செய்து வெறுப்பேற்றினார் என்றும் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சண்டை முற்றியுள்ளது எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், “கொலையுண்ட விக்னேஷ், ஐஐடி முடித்துள்ளார். இவர் சிங்கப்பூரில் வேலைக்கு விண்ணப்பித்து விசாவுக்காக காத்திருந்துள்ளார்” என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் மோகத்தில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஊடகம்