![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaxE-HEkoYnoaKptMI0XjJKiiAyXPERO5bUKpmY-PbAZi4uhEyPUJOaASkoo4m8CH0IySo7IDAU_345KhoDONnCRb4o2g8hBjd2ionhRiR4pKZI-Qfq2V9PgYe15v_YzKu0Dgvf2NheeMH80Zl6AA8dbqwQTpuoKRlECBzQ01FYWJCoOlF2Mz9D-4_/s16000/Easter-Sunday-Attacked.jpg)
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பைப் பேணி வந்தார்கள் எனக் கூறப்படும் சந்தேக நபர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய 29 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் இன்று (06) உத்தரவிட்டார்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய 29 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
-கனகராசா சரவணன்