![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUZVdJ3dmP4XCI1o2h5rv5yRA3I0BLgV3EIrY4078efCjAw_wRS6UkEZPwRDGmOqlYNiYSAAH8IXP0GvZA91wWJRy2Dvo96_JVGNmanACDE5u19SRoeBtMDXBk1Wjgb4dilBD2lKQjIggTez7ibMT9XQjA7-4SF_9_V09Jr6D9zwavf7Be5Q3gSnArxw/s16000/3D2B6B26-6316-45D6-AB0A-05701918329B.png)
கனடாவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் கொடூரமானது மற்றும் இதயத்தை உடைக்கும் சம்பவம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்தார்.
கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
அம்மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். கனடியன் கால்பந்து லீக் போட்டிகள் (ரக்பி) ரஜினா நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் கத்திக்குத்து தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் டமியன் சண்டர்சன், மைலஸ் சண்டர்சன் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவில் அடுத்தடுத்து கத்திக்குத்து நடத்தப்பட்டு 10 பேர் பலியான சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் பற்றி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "சஸ்காட்செவனில் இன்று நடந்த தாக்குதல்கள் கொடூரமானவை மற்றும் இதயத்தை உடைப்பவை. தங்களை நேசிப்பவரை இழந்து தவிப்பவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி நான் நினைத்து பார்க்கிறேன்" என்று அவர் பதிவிட்டார்.