ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களுடன் கூடிய 88 அத்தியாயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை ஜனாதிபதி சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இன்று (22) நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டதுடன், சட்ட ரீதியான காரணங்களுக்காக அதனுடன் இணைந்த சாட்சியங்கள் இதுவரை வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக ஆய்வுக்காகவும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.