இலங்கையில் இன ரீதியாக, மத ரீதியான வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் உருவாக்க காரணமாக இருந்தவர்களை இன்று அரசியல் கட்சிகளில் பார்க்க முடிவதாக தல்பொத்த தம்மாஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் தேரர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நமது நாட்டில் இன ரீதியாக, மத ரீதியாக ஒரு சில வேறுபாடுகளை, முரண்பாடுகளை, பிரச்சினைகளை உருவாக்கிய, உருவாக்க காரணமாக இருந்தவர்களை நான் இன்று சில அரசியல் கட்சிகளில் பார்க்கின்றேன்.
இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவித்து ஒற்றுமையை உடைத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. இன்றும் அதுதான் நடந்து கொண்டுள்ளது. இவை இன்று பெரிதாகவே நடக்கின்றன.
அவற்றின் வெளிப்பாடுகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. விபரமாக கூறவும் விரும்பவில்லை. அன்று திகன கலவரத்திற்கு பிரதானமாக இருந்தவரை தான் இன்று ஒரு முக்கிய பதவியில் அமர்த்தியுள்ளார்கள்.
இப்படியெல்லாம் இருக்கும் போது நாம் எப்படி இன, மத ரீதியான ஒற்றுமையை பற்றி பேசுவது? ஆகவே நான் இவற்றை எண்ணி மிகவும் கவலையடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.