ஹெட்லெஸ் சிக்கன்; தலையை துண்டித்த பின்னும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹெட்லெஸ் சிக்கன்; தலையை துண்டித்த பின்னும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்!


அமெரிக்காவில் நடைபெற்ற அதிசயம் இது. தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசயக் கதை இது.

இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான சம்பவம். 70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம் 'மிராக்கிள் மைக்' என்ற பெயரில் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது இச்சேவல் தலை வெட்டப்பட்ட பிறகு நீண்ட காலம் வாழ்ந்த சேவல் இதுதான் என்று கூறப்படுகிறது.

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொலராடோவில், ஃப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

சுமார் 40 - 50 கோழிகளை வெட்டியிருப்பார்கள். ஆனால் அதில் ஒன்று மட்டும் உயிருடன் தத்தித் தத்தி நடைபோட்டுக் கொண்டிருந்தது.

ஓல்சென் மற்றும் கிளாராவின் கொள்ளுப் பேரன் ட்ராய் வாட்டர்ஸ் அந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறார், "வெட்டும் வேலை முடிந்ததும், கொள்ளு தாத்தாவும், பாட்டியும் இறைச்சியை சுத்தப்படுத்த தொடங்கியபோது, அதில் ஒன்று மட்டும் தலை வெட்டப்பட்ட நிலையிலும் அங்கும் இங்கும் தளிர் நடை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்."

தலையில்லா சேவலை தம்பதிகள் ஆப்பிள் பெட்டி ஒன்றில் வைத்து விட்டு சென்று விட்டார்கள். சற்று நேரத்தில் இறந்துவிடும், அதுவரை அது முண்டமாக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் காலையில் வந்து பார்த்தபோதும் அது உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார் ஓல்சென்.

சிறுவனாக இருந்தபோது தனது முப்பாட்டனிடம் இருந்து இந்தக் கதையை கேட்டிருக்கிறார் ட்ராய் வாட்டர்ஸ்.

மைக் என்ற அந்த சேவலை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.

வாட்டர்ஸ் சொல்கிறார், ''இறைச்சி விற்கும் சந்தைக்கு செல்லும்போது அந்த தலையில்லா சேவலையும் கொள்ளுத் தாத்தா எடுத்துச் சென்றார். அந்த காலத்தில் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல குதிரை வண்டியை பயன்படுத்துவார்கள்.''

"இந்த சம்பவத்தை கேட்டவர்களில் சிலர் இதை கட்டுக்கதை என்று கூற, அது உண்மையா இல்லையா என்று பந்தயங்களும் நடந்தது. பந்தயப் பொருட்களாக பியர் அல்லது அதுபோன்ற பல பொருட்கள் வைக்கப்பட்டன."

மைக்கைப் பற்றிய செய்தி அந்த வட்டாரம் முழுவதும் தீயைப் போல பரவியது. உள்ளூர் பத்திரிகை ஒன்று ஓல்ஸேனிடம் பேட்டி எடுக்க தனது செய்தியாளரை அனுப்பியது. தொடர்ந்து பல பத்திரிகையில் மைக் மற்றும் ஓல்செனின் புகைப்படங்களும், கட்டுரைகளும் வெளியாகின.

சில நாட்களுக்குப் பிறகு, 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரத்தில் கண்காட்சிகளை நடத்தும் ஹோப் வேட், ஃப்ரூட்டோவிற்கு வந்தார். மைக்கை பார்த்து உறுதி செய்துக் கொண்டார். தனது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருமாறு ஓல்ஸேனுக்கு அழைப்புவிடுத்தார்.

அவரின் அழைப்பை ஏற்று முதலில் சால்ட் லேக் நகரத்திற்கு சென்ற ஓல்ஸேன், முதலில் யூடா பல்கலைக்கழகத்திற்கு மைக்கை கொண்டு சென்றார். அங்கு மைக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

பல கோழிகள் மற்றும் சேவல்களின் தலையை வெட்டியும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதாவது வெட்டப்பட்ட பிறகு எத்தனை நேரம் அவை உயிர் வாழும் சாத்தியங்கள் இருக்கும் என்று ஆராயப்பட்டது.

மைக் தலைவெட்டப்பட்டும் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர் உறுதி செய்தபிறகு மைக் கண்காட்சிகளிலும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது. மைக்கின் உரிமையாளரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்பட்டது.

'மிராக்கிள் மைக்' என்று மைக்குக்கு பெயர் சூட்டினார் ஹோப் வேட். 'மிராக்கிள் மைக்' பற்றி 'லைஃப் மேகஸின்' கட்டுரை வெளியிட்டது.

அதற்கு பிறகு லாய்ட், கிளாரா மைக் மூவரும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கலிஃபோர்னியா, அரிஜோனா மற்றும் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளுக்கும் அவர்கள் சென்றனர்.

மைக்குடன் சென்ற இந்த சுற்றுப்பயணம் தொடர்பான குறிப்புகளை கிளாரா எழுதி வைத்திருக்கிறார். அவை இன்றும் வாடர்ஸிடம் இருக்கின்றன.

ஆனால் சுற்றுப் பயணத்தின்போதே, 1947ஆம் ஆண்டு அரிஜோனாவின் ஃப்ரின்க்ஸில் மைக் இறந்துவிட்டது.

மைக் எப்படி உணவு சாப்பிட்டது?

மைக்குக்கு தினமும் திரவ வடிவிலான உணவுகள் சொட்டு மருத்து கொடுப்பதுபோல் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

தொண்டையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்ச் மூலமாக மைக்கின் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒரு நாள் சிரிஞ்ச் கொண்டு செல்ல மறந்துவிட்ட நிலையில், மாற்று ஏற்பாடு செய்வதற்குள் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மைக் இறந்துவிட்டது.

தலை வெட்டப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும், ஒரு சிறிய சிரிஞ்ச் இல்லாத காரணத்தால் உயிரிழந்தது 'மிராக்கிள் மைக்'.

தலை இல்லாமல் வாழ்ந்தது எப்படி?

வாட்டர்ஸ் சொல்கிரார், "மைக்கை விற்றுவிட்டதாக தாத்தா அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் சில நாட்களுக்கு பிறகு என்னிடம் உண்மையை சொல்லிவிட்டார்."

ஆனால் அவருடைய வாழ்க்கை நிலையும், பொருளாதார நிலைமையும் முன்னேறியதற்கு காரணம் மைக்தான்.

மைக் எப்படி தலையில்லாமல் பல மாதங்கள் வாழ்ந்தது என்பதற்கான சாத்தியக்கூறுகளை சொல்கிறார், நியூகைஸல் பல்கலைக்கழகத்தின், நடத்தை மற்றும் பரிணாம மையத்துடன் இணைந்து பணிபுரியும் கோழிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிபுணரும், பேராசிரியருமான டாம் ஸ்மல்டர்ஸ்.

"கோழி மற்றும் சேவலின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள ஒரு சிறிய பகுதியில்தான் இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று".

மைக்கின் தலையை வெட்டியபோது, அதன் அலகு, முகம் மற்றும் கண்கள் வெளியே வந்துவிட்டன, ஆனால் அதன் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீதமும் வெட்டுப்படவில்லை. இதனால், மைக்கின் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்தது என்கிறார் பேராசிரியர் டாம் ஸ்மல்டர்ஸ்.

நன்றி - பி.பி.சி தமிழ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.