
மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு பொலிஸார் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியுள்ளதுடன், இதுதொடர்பில், ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான சனிக்கிழமையன்று மும்பையில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு கோவா வழியாக மீண்டும் 04ஆம் திகதி காலை மும்பை திரும்பும் வகையில் கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
800க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி சனிக்கிழமை மதியம் அந்த சொகுசு கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியது.
இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றதுடன், கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர்.
நேற்று இரவு கப்பலில் நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. பயணிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடியபோது அவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக களத்தில் குதித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து, போதைப் பொருட்களை விநியோகம் செய்த 08 இளைஞர்களை கைது செய்தனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்திய இளைஞர்கள், இளம் பெண்களையும் தனிமைப்படுத்தி விசாரணை செய்தபோது அவர்களில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரியவந்தது. அனைவரும் மும்பை அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-இந்திய ஊடகம்

