இஸ்லாமியர்களின் இறைவன் அல்லாஹ் மீது அவதூறான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (26) மீண்டும் அதே கருத்தை யூடியூப் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனக்கெதிராக போலிஸுக்கு செல்வோர், சி.ஐ.டிக்கு செல்வோர், விமர்சனங்களை செய்வோர் உட்பட்ட பலரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
"எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதை நான் கூறிவைக்க விரும்புகிறேன். சஹ்ரானின் கொள்கைகளை பின்பற்றுவோர் இன்னும் இந்த நாட்டில் உள்ளனர். தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 50 ஆயிரம் பேர் நாட்டில் உள்ளனர். அதனால்தான் நாட்டில் அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது என்று கூறுகிறேன்.
புலனாய்வு பிரிவினருக்கு இவை குறித்த தகவல்கள் இருக்கின்றன. முஜிபுர் ரஹ்மான், சாணக்கியன் போன்ற பைத்தியக்காரர்கள் என்னிடம் நேரடியாக எதனையும் கேட்டால் என்னுடன் விவாதத்திற்கு வந்தால் நான் முறையாக அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரி அல்லாஹ்தான் என்ற நிலைப்பாட்டை நான் இன்றும் கொண்டுள்ளேன். அல்லாஹ்வின் துணையின்றி எதனையும் செய்யமாட்டேன் என்று அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன. அதில் சொல்லியுள்ளவற்றை நான் கூறுகிறேன்.
நான் இனவாதியல்ல. முஸ்லிம்கள் கொரோனாவால் இறக்கும்போது அந்த உடல்களை அடக்கம் செய்யுமாறு நான் கூறினேன். அப்போது சிங்களவர்கள் என்னை ஏசினர். நான் முஸ்லிம்களிடம் பணம் பெற்றதாக அப்போது சொன்னார்கள். நான் இனவாதியாக இருந்தால் அந்த உடல்களை எரியுங்கள் என்று கூறியிருப்பேன். இவர்கள் பொலிஸுக்கு போகட்டும். நான் இன்னும் சில தினங்களில் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிடுவேன்.
மேலும் எந்நேரமும் தாக்குதலொன்று நடக்கலாம் என்று நான் கூறிய அதே கருத்தில் இன்றும் இருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டார்.