நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐ. நா சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ. நா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பானது ஐ. நா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐ. நா சபை தனது முழு ஆதரவை வழங்கும் என ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையின் தலைமையகத்திற்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சிறப்பான வரவேற்பை ஐ.நா பொதுச் செயலாளர் வழங்கியுள்ளார்.
மேலும் 1978 இல் அகில நாடாளுமன்ற சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வருகை தந்தமையையும் அவர் நினைவு கூர்ந்தார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சிறிலாங்காவிற்கு வருகை தந்தபோது அவர் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
-அஹமட் லெப்பை ஜுனைதீன்