ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக இரு நைஜீரிய பிரஜைகள் கொழும்பு - தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் இணைய குற்றப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகநபர்கள் பெண்ணொருவருக்கு அவர் பெரும்தொகை பரிசு வென்றுள்ளதாக கூறி வாட்ஸாப் மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு பரிசைக் கோருவதற்காக ஒரு பெரிய தொகையை வங்கியில் வைப்பிலிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெறப்பட்ட முறைப்பாட்டிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தண்துவ தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவற்றிற்கு இரையாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். (யாழ் நியூஸ்)