வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (28) நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுலாக்கப்படவுள்ளதுடன், இவ்வாறு இலங்கை வருபவர்கள் நாட்டுக்கு வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக பூரணமாக தடுப்பூசிகளை பெற்றவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பான தொழில்நுட்ப குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பூரணமாக தடுப்பூசிகளை பெற்றிராத வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, தமது விடுதிகளில் உயிர்குமிழி நடைமுறையை கடைபிடிக்க வசதியளிக்கப்படுவதுடன் அதன்போது, பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், நாடு திரும்பும் பூரண தடுப்பூசி பெறாத இலங்கையர்களுக்கு விமான நிலையத்திலோ, தாம் தங்கவுள்ள விடுதியிலோ பி.சிஆர் பரிசோதனை செய்துகொள்வதற்கு, குறித்த பரிசோதனையில் தொற்று உறுதி ஏற்படவில்லை என பெறுபேறு கிடைக்குமாயின் அவர்களை வீடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்பின்னர், மீண்டும் 12 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்போது, தொற்று உறுதியாகாவிடின் அவர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.