காதி நீதிமன்ற ஒழிப்பும் முஸ்லிம் சட்டத்திற்க்கு எதிராக முதல் துப்பாக்கி நீட்டும் முஸ்லிம்களும்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதி நீதிமன்ற ஒழிப்பும் முஸ்லிம் சட்டத்திற்க்கு எதிராக முதல் துப்பாக்கி நீட்டும் முஸ்லிம்களும்!!


முஸ்லிம் தனியார் சட்டத்தில்  இருந்த, சில திருத்தப்பட வேண்டிய குறைபாடுகளை சந்தர்பமாக  பயன்படுத்தி, முஸ்லிம் பெண்களுக்கு அநியாயம் நடப்பதாக,  ஆடு நனையுது என சில  ஓநாய்கள்  ஒப்பாரி வைத்ததை நாம் கண்டோம்.

தேர்தல் காலங்களில் இந்த இனவாத சக்திகளுக்கு சாதகமாக, முஸ்லிம் சமூகத்தின் பாசறைக்குள் வாழும், சில பெயர் தாங்கி முஸ்லிம்களும்,  இனவாத மீடியாக்களில் தோன்றி, இனவாதிகளுக்கான  பங்களிப்பைச் செய்ததையும் அக்காலங்களில் அவதானிக்க முடிந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக, தேர்தல் காலங்களில் காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட வேண்டும் என கொக்கரித்தவர்களால் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, நமது முஸ்லிம் அமைச்சரால் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது தமது அறிக்கையை  அமைச்சரிடம்  சமர்ப்பித்துள்ளது. 

அறிக்கையில் அடங்கியிருப்பது என்ன?

இவ்வறிக்கையை தயாரித்த இக்குழுவானது இஸ்லாமிய சட்டங்களை கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. 

இவர்கள் தயாரித்த இவ்வறிக்கைக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆலோசனைகள், அபிலாசைகள், குர்ஆனியன சட்டங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இது சம்பந்தமான விபரங்கள், முஸ்லிம் சமூகத்தில் பகிரங்க படுத்தப்படவில்லை. 

இரகசியமாக தயாரிக்கப்பட்டு அமைச்சரின் கையிலும் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இவ் அறிக்கையில், அடங்கியிருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள முஸ்லிம் சமூகத்திற்கு உரிமை இருக்கின்றது.

ஆனால் இவ்வறிக்கையில் அடங்கியுள்ளவை என்ன. இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள் என்ன என்பது பற்றி முஸ்லிம் சமூகம் இன்று அறியாத நிலையில் காணப்படுகிறது . 

முஸ்லிம் சமூகம் இவற்றை அறிந்து கொள்வதற்கான எந்த விதமான வாய்ப்பு வசதிகளும் அளிக்கப்படவில்லை. இவ்வறிக்கையை பகிரங்கப் படுத்தப்படவும் இல்லை.

இது சம்பந்தமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெரிந்து கொள்ள பல முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டபோது, இவ்வறிக்கையில் அடங்கியிருப்பது தாமும் அறிய அறியவில்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

மேலும் இது சம்பந்தமாக  அறிந்துகொள்ள இக்குழுவில் அங்கம் வகித்த, பெண்ணுரிமை சார்பாக குரல் கொடுத்த ஒரு பெண் சகோதரியை தொடர்பு கொண்டபோது.

இது சம்பந்தமாக அவர் ஒரு சில விடயங்களை மாத்திரம் தெரிவித்தார். காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டு அவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும் எனவும் இது சம்பந்தமாக மேலும் அவரிடம் விவரங்களை அறிந்துகொள்ள முற்பட்டபோது, குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை, விபரங்களை, வெளியிட   அவரும்  மறுப்பு தெரிவித்தார். 

இது சம்பந்தமான அமைச்சருடனும் முக்கிய தரப்புக்களுடனும் கலந்து கொண்டவர்களை அணுகியபோது, அவர்களும், எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்திகரமானதாக இல்லை என்பதையும், மார்க்க சட்ட திட்டங்கள், குர்ஆனிய சட்டதிட்டங்கள், கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும்,  அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், முஸ்லிம் சமூகத்தின் தனியார் சட்டம் சம்பந்தமாக சந்திப்புக்கள் திருப்திகரமானதாக இல்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

எனவே இது சம்பந்தமாக  பலரிடமும் பல மாதங்களாக பெற்றுக் கொள்ளப்பட்ட விபரங்களின் அடிப்படையில், காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டு,  பலதார் மணம் தடை செய்யப்படும் என்ற உண்மையை தெரிந்துகொள்ள முடிந்தது.

மேலும் இது வரை காணப்படாத  மணப் பெண்ணின் விருப்பம் சம்பந்தமாக,  படிவத்தில் கையொப்பம் வாங்கும் ஒரு வரவேற்கத்தக்க நடைமுறை உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிந்துகொள்ள முடிந்தது.

மேலும் இது சம்பந்தமாக சில முக்கிய முஸ்லிம் அமைப்புகள்,  முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக குர்ஆனிய சட்டங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும், கவலை தெரிவித்து அமைச்சரிடம்  மகஜர்களை கையளித்ததையும் அறிய முடிந்தது. 

பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மத கலாச்சாரங்களுக்கு ஏற்ப, சட்டங்கள் இருக்கின்றபோது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில், நமது முஸ்லிம் தனியார் சட்டம் மீது மட்டும்  துப்பாக்கி நீட்டப்பட்டது நியாயமற்ற தாகும்.

குறைபாடுகளுடன் காணப்பட்ட, சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய  முஸ்லிம் தனியார் சட்டத்தை, ஒரு சந்தர்பமாகப் பயன்படுத்தி ஒழித்துக் கட்டப்பட்டதே  உண்மையாகும்.

இது சம்பந்தமாக கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அவர்களை தொடர்பு கொண்டபோது.

இது சம்பந்தமாக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களையும், முன்னை நாள் அமைச்சர்களையும், இன்னும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளையும் தெளிவுபடுத்தும் படியும், தான் இது சம்பந்தமாக ஈடுபட்பவர்களிடம்  வேண்டிக் கொண்டதாகவும், அவை நடக்கவில்லை எனவும் கவலை தெரிவித்ததார்.

மேலும் இது சம்பந்தமாக முன் நின்று கதைப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடமும் முன்னை நாள் அமைச்சர்களிடமும் தாமும் இது பற்றி கதைத்ததாகவும், யாரும் இது பற்றி அக்கறை கொண்டாதாக தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்தார். 

பாராளுமன்றம் இன்னும் விடுமுறையில் இருப்பதால், இந்த அமைச்சரவை பத்திரம் இன்னும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்றும், அவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதிகப்படியான ஆதரவு மறு பக்கத்தில் இருப்பதால், இச்சட்டம்மானது நிறைவேற்றப்பட்டு காதி நீதிமன்றம் ஒழிக்கப்படும்  எனவும் அவர் கவலை  தெரிவித்தார்.

மேலும் இது சம்பந்தமான விடயங்கள் முடிவுகள் தீர்மானங்கள் அவருக்கும் அறிவிக்கப்படாத நிலைமையில், அவரும் விபரங்கள் அறியாதவராக காணப்பட்டார்.

இது சம்பந்தமாக முஸ்லிம் அரசியல் தகைமைகள் பேச பயப்படுவதாகவும் ஒரு சில தகவல்களின் முலம் அறிந்து கொள்ள முடிந்தது.

எனவே இது சம்பந்தமாக எமது முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து எந்த எதிர் பார்ப்பும் எதிர்பார்பதில் அர்த்தமில்லை என்பதே உண்மை.

ஆக மொத்தத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தில் இருந்த உரிமைகள், சலுகைகள், பறிக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

காதி நீதிமன்றம் நடைமுறையில் முறையில் இருக்கும்போது, முஸ்லிம் தம்பதிகள் தமக்குல் ஏற்படும் பிரச்சினைகள் காதியால்  ஆராயப்பட்டு,  இவர்கள் தொடர்ந்தும் சேர்ந்து வாழ முடியுமானவரை முயற்சிகள் செய்யப்படுகிறது. முடியாத பட்சத்தில் குடும்பத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மூலமாக, ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாக, புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு குடும்பம் பிரிவதை விட சேர்த்து வைக்கவே முடிந்தவரை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 
அதுவும் சாத்தியப்படாத பட்சத்தில் தொடர்ந்தும் இவர்கள் சேர்ந்து வாழலாமா? அது சாத்தியப்படுமா? போன்ற நிலைப்பாடுகள் கருத்தில் எடுக்கப்பட்டு, அவரவர் வயது எல்லைகளில் கூடிய கவனம் எடுக்கப்பட்டு சீக்கிரத்தில் அதற்கான தீர்வு வழங்கப்படுகிறது .

அதற்கு ஏற்றவாறு அவர்கள் பிரிந்து  போகவும், வேறு திருமணங்கள் செய்து குடும்பமாக வாழவும் கூடிய சீக்கிரத்தில் வழி அமைக்கப்பட்டன.

அல்லது அவர்களுக்கு இடையிலான பிச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கான  அறிவுரைகள் வழங்கப்பட்டு சேர்ந்து வாழ்வதற்கான வழி வகைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இதேவேளை காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட்டால், இவ்வாறான பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு புரிந்துணர்வு அடிப்படையில், சமூகம் என்ற கண் நோட்டத்தில் இதற்கான கவனம் செலுத்தப்படுமா என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது.

அங்கு சட்டம் மட்டுமே நிறைவேற்றப்படுமே தவிர, புரிந்துணர்வுகளில்  கவனம் செலுத்ப்பட மாட்டாது என்பதே உண்மை. இவை அத்தனையும் கவனத்தில் கொண்டு கூடிய சீக்கிரத்தில் இவற்றுக்கான விமோஷசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மற்றும் புரிந்துணர்வுகளுக்கு அங்கு முதலிடம் அளிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததின் காரணமாக, அங்கு செல்லும் அத்தனை பிரச்சனைகளும் பிரிவினையையிலேயே முடியும் என்பதில் சந்தேகமில்லை

ஆக மொத்தத்தில் காதி நீதிமன்ற ஒழிப்பில் பெண்கள் தரப்பும் அமைச்சரும் காதி நீதி மன்றம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல் பட்டத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது. 

இதற்கான காணமாக இவர்கள் சில பெண்களுக்கு காதி நீதி மன்றங்களாளும் சில காதி நீதிபதிகளாளும் ஏற்பட்ட அசாதாரணங்களை இவர்களின் வாதத்தின் கருப் பொருளாக வைத்தும், காரணமாக வைத்தும் வாதிட்டதையும் அறிய முடிந்தது.

இவற்றை நோக்கும் போது நிர்வாக சேவைகள் உற்பட அனைத்து தரப்புக்களிலும் தப்புத் தவறுகளும் நடக்கவே செய்கின்றன. அதற்காக அதில் இருக்கும் அத்தனை பேரும் தவறானவர்கள் என எடை போடுவது தவறு. தவறான ஒருவர் அதனுள் நுழைந்துள்ளார் என்பதே உண்மை.

அதற்காக அவை அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுவதுமில்லை. அதன் சேவைகள் நிறுத்ப்படுவதுமில்லை.  அத‌ற்கான தண்டனைகளும்
வழி வகைகளும் ஏற்படுத்தப்பட்டு அனைத்தும் தொடரவே செய்கின்றன . 

விரல் கண்ணில் குத்தியதற்காக விரலை வெட்டுவதில்லை.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமையயில் மட்டும் இவற்றை  காரணமாக காட்டி, ஒழிக்க நினைப்பது இவர்கள் சமூகத்திற்கு செய்யும் பெரும் அநியாயமும் துரோகமுமாகும்.

மேலும் இதுவரையில் மறியாதையாகவும் இரகசியமாகவும் ஆராயப்பட்டு தீர்த்து வைக்கப்பட்ட முஸ்லிம் தம்பதிகளின் பிரச்சினைகள், இனிவரும் காலங்களில் நடு நீதி மன்றத்தில், நானூறு பேருக்கு மத்தியில், மாற்று மத நீதி பதிகளால், மாற்று மதத்தவர்களின் முன் சீரழியப்போகும் பட்சத்தில், இவைகளில் ஏற்படும் பிரச்சினைக்கும் சமூக சீரழிவுக்கும் அல்லாஹ்விடத்தில் இவர்களே பொறுப்புதாரிகள்.

இன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் இவர்கள் நாளை அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.