போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!


நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில்,  அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும், வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


அத்தோடு கொரோனா மரணங்கள் தொடர்பான தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும்  இருக்க வேண்டும் என்றும் , அவை ஏனைய தீர்மானங்களை எடுப்பதற்கு அவசியமாகுமென்றும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.


கொரோனா ஒழிப்புக்கான விசேட குழு இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்க வேண்டும். அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும்.


அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும்.


கொரோனா அல்லாத மரணங்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை பலரும் முன்வைத்துள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.


நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை கடந்த 14 ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 11 ஆம் திகதியன்று 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் 21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.


இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06 முதல் ஜூன் 11 ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.


ஜூன் 11 ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும்.  இது தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின்போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரிய வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


தற்போது, சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜூலை மாதமளவில் குறைந்தபட்சம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளன. அதற்கமைய விரைவில் அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கக்கூயடியதாக இருக்கும் என அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.


இதேவேளை 23 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.


அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்த்தன, ரமேஷ் பதிரண, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டாபுள்ளே, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.