மன்னார், இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் ரிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று (18) மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (1) கஸ்தூரி ஆராச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம இன்பெக்டர் ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்துக்கு அருகாமையில் 89 கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
கேரள கஞ்சாவையும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றிய நிலையில் இதனை கொண்டு சென்றார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைக் கைது செய்துள்ளனர்.
இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றையவர் நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்களுடன் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ரிப்பர் வாகனம், மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.
-மெட்ரோ