முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு பகுதியில் இன்று (25) பிற்பகல் 2.00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது இரு இளைஞர்கள் காயமடைந்திருந்ததுடன் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுநீர் கழிக்க காட்டுப் பகுதி ஒன்றுக்குள் சென்ற 19, 20 வயதுடைய இளைஞர்கள் இருவரே சம்பவத்தில் காயமடைந்திருந்தனர். இதன்போது 19 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும், தொடர்ச்சியான மழைக் காரணமாக பூமிக்குள் புதைந்து கிடந்த பொருட்கள் சில வெளியில் தெண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த யுத்த காலத்தின் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏதேனும் பொருளில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் விசேட நிபுணர்களின் பரிசோதனையின் பின்னரே அதனை உறுதியாக தெரிவிக்க முடியும். இந்நிலையில் விசேட நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.