சாட் (Chad) நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வான டெபி போர்க்கள பகுதியில் காயம் ஏற்பட்டதில் இன்று மரணம் அடைந்து உள்ளார்.
சாட் நாட்டில் கடந்த 11ஆம் திகதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில், 65 சதவீதத்திற்கும் கீழ் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில், அதிபராக பதவியில் உள்ள இத்ரிஸ் டெபி (வயது 68) வெற்றி பெற்றார். இதனால், 6வது முறையாக அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு புரட்சி ஒன்றின் வழியாக அதிகாரத்திற்கு வந்தவர் டெபி.
இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஆதரவாளர்களிடையே வெற்றி உரையாற்றாமல் அதனை தள்ளி வைத்து விட்டு ராணுவ வீரர்களின் போரிடும் பகுதிக்கு சென்றுள்ளார். தேர்தல் நடந்த அன்று கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது.
அவர்களுக்கு எதிரான போரில், வீரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றதில் டெபிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்து விட்டார். மீண்டும் அதிபராக நேற்று தேர்வான சூழலில் இன்று அவர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.