சவூதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். 2030ஆம் ஆண்டுக்குள் சவூதி அரேபியாவை உள்கட்டமைப்பு, கல்வி, கலாச்சாரம் போன்றவற்றில் சிறந்த நாடாக உருவாக்க திட்டமிட்டு 'விஷன் 2030' என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
பல்வேறு நாடுகளின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை சவூதி அரேபிய மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் யோகா ஆகியவை கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த யோகா ஆசிரியரும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெற்றவருமான நௌஃப் மார்வாய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சவுதி அரேபியாவின் புதிய விஷன் 2030 மற்றும் பாடத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள தலைமுறையை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
தனது மகனின் பள்ளித் தேர்வில் இந்து மதம், புத்த மதம், மகாபாரதம், ராமாயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளின் புகைப்படங்களையும் அவர் டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
ராமாயணம், மகாபாரதம் மட்டுமின்றி யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்தியாவின் கலச்சாரங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. ஆங்கில மொழியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.