கத்தாரிலிருந்து கடத்தப்பட்ட சுமார் 32 கோடி ரூபா பெறுமதி மிக்க 26 கிலோ தங்கத்துடன் இருவரைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று (30) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும், விமான நிலையத்தின் பராமரிப்பு ஊழியர் ஒருவரும் பயணி ஒருவருமே கைது செய்யப்பட்டதாகவும் சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்டம்) சுதத்த சில்வா தெரிவித்தார்.
மிக நீண்ட நாட்கள் சுங்கப் பிரிவினர் முன்னெடுத்த விசேட மேற்பார்வை நடவடிக்கை ஒன்றின் பலனாக இக்கைது நடவடிக்கை சாத்தியமானதாகவும், இது இலங்கையில் சுங்கப் பிரிவின் வரலாற்றில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட தி கூடிய நிறைக் கொண்ட தங்கம் இதுவெனவும் அவர் மேலும் கூறினார்.
கைப்பற்றப்பட்ட 26 கிலோ தங்கத்தில், தங்க பிஸ்கட்டுக்களும் ஆபரணங்களும் அடங்குவதாக குறிப்பிட்ட சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா, விமான நிலைய பராமரிப்பு ஊழியர் தங்கத்தை உடலில் மறைத்து விமான நிலைய வளாகத்துக்கு வெளியே எடுத்து செல்ல எத்தணிக்கும்போது கைது செய்யப்பட்டதாக கூறினார்.
கட்டாரின் தோஹாவிலிருந்து வந்த பயணி, விமான நிலைய கழிவறையில் வைத்து விமான நிலைய பராமரிப்பு ஊழியரிடம் கொடுத்துள்ளார். அவர் அதனை உடலில் மறைத்துக்கொண்டு வெளியேறும் போதே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பின்னர் தங்கத்தை கொடுத்த பயணியையும் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
-எம்.எப்.எம்.பஸீர்