இந்திய தமிழ் நாட்டின் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் துலாம் சரவணன், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குள வசதியுடன் 3 மாடி வீடு, வீட்டுக்கு தலா ஒரு கார், ஒரு ஹெலிகாப்டர், ஒரு படகு வழங்கப்படும் என்றும், 100 நாள் பயணமாக நிலவுக்கு சுற்றுலா, தொகுதி சில்லாக இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை, இயற்கை கடல் அமைக்கப்படும் தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகை, இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான அதிமுக (AIADMK) மற்றும் திமுக (DMK) கட்சிகளை மிஞ்சும் வகையில், சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதிகள் பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தினாலும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது.
ஏனென்றால், இதுபோன்ற வாக்குறுதிகளும் ஒருவரால் கொடுக்க முடியுமா என்று, தமிழக அரசியல் வரலாற்றில், இப்படி ஒரு வாக்குறுதிகளை யாராவது கொடுத்து இருப்பார்கள் என்றால், இல்லை என்பதே பதில்.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான துலாம் சரவணனின் வாக்குறுதி பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், "நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்குகள், சட்டமன்றத்தில் உங்களுக்காக ஒலிக்கும் என் வார்த்தைகள்", "நமது நேர்மையின் சின்னம் குப்பைத்தொட்டி" எனத் தெரிவித்துள்ளார்.