வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் இஸ்லாமிய சமயம் சார்ந்த புத்தகங்களை தருவிக்கும்போது அல்லது கொள்வனவு செய்யும்போது, அப்புத்தகங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு MOD/CNI/SY/LOCAL/367 (VOL 01 97) எனும் கடிதம் ஊடாக இலங்கை சுங்கத் இணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தளை விமான நிலையம் உள்ளிட்ட தனது அனைத்துப் பிரிவுகளுக்கும் இது தொடர்பில் கவனம் செலுத்தக்கோரி அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இஸ்லாமிய சமயம் தொடர்பில் எந்த வகையிலேனும் புத்தகம் ஒன்று நாட்டுக்குள் வருமாயின் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னரேயே அது அனுமதிக்கப்படும் என சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை நாட்டுக்குள் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டுவரப்படும் போது, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அது தொடர்பில் மேற்பார்வை நடவடிக்கைகளை முன்னெடுத்து சான்றிதழ்களை வழங்கி வந்ததுடன், அவர்களின் அனுமதியுடனேயே புத்தகங்கள் தருவிக்கப்பட்டிருந்தன.
$ads={1}
எவ்வாறாயினும் கத்தாரிலிருந்து அண்மையில், பேருவளை நபவியா எனும் இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கு அனுப்பப்பட்டிருந்த 9௦ புத்தகங்களில் 04 புத்தகங்கள் சலபி மற்றும் வஹாப் வாத சிந்தனைகளை கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சு தனது அனுமது இன்றி, இஸ்லாமிய சமய புத்தகங்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதை தடை செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கட்டாயமாக்கும் நடைமுறையானது கடந்த 05 ஆம் திகதி முதல் அமுல் செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்களும் சுங்கத் திணைக்களத்தின் தகவல்கலும் உறுதி செய்தன.
இது தொடர்பிலான பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு, புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.