அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவிருக்கின்றன. முதலாம் கட்டத்தில் ஆறு பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 18 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இருந்தபோதிலும் இரண்டு கட்டங்களிலுள்ள பாடசாலைகள் ஏக காலத்திலேயே அமுலுக்கு வரும் வகையில் செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.
முதலாம் கட்டத்தில் கல்முனை வலயத்தில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியும், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியும், சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயமும், லாகுகலை வலயத்தில் பாணமை மகா வித்தியாலயமும், தமன வலயத்தில் மடவளாந்த மகா வித்தியாலயமும், மகாஓய வலயத்தில் கெப்பிட்டிபொல மகா வித்தியாலயமும் தெரிவாகியுள்ளன.
இரண்டாம் கட்டத்தில் அக்கரைப்பற்று வலயத்தில் ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயமும், அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலயமும், அஸ்ஸிறாஜ் மகளிர் வித்தியாலயமும், பொத்துவில் அல் இர்பான் மகளிர் வித்தியாலயமும், கல்முனை வலயத்தில் மருதமுனை ம்ஸ் மகாவித்தியாலயமும், உவெஸ்லி உயர்தர பாடசாலையும், கல்முனை மகுமுத் மகளிர் கல்லூரியும், அல்பகுரியா மகா வித்தியாலயமும், நிந்தவூர் அல்மஸ்ஹர் மகா வித்தியாலயமும், சம்மாந்துறை வலயத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயமும், அல்அர்த் மகா வித்தியாலயமும், நாவிதன்வெளி சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயமும் ஏனைய ஆறு சிங்கள பாடசாலைகளும் தெரிவாகியுள்ளன.
மத்திய கல்வியமைச்சின் உயரதிகாரிகள் குழுவினர், திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் மேற்படி பாடசாலைகள் அங்கீகரிக்கப்பட்டன.
இத்தெரிவில் திருக்கோவில் போன்ற ஒருசில வலயங்கள் விடுபட்டிருக்கின்றன. மட்டுமல்லாமல் மேலும் சில பாடசாலைகள் சேர்க்கப்பட வேண்டும் என அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.