ஈஸ்டர் ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள குற்ற விசாரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களும் பூரணமற்றவை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, பூரணமான விடயங்களை உள்ளடக்கி உடனடியாக தமக்கு அறிக்கையிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
30 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிவுறுத்தலில், விசாரணைகளின் பூரணத் தன்மையை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான ஆலோசனைகளை சட்ட மா அதிபர் அளித்துள்ளதாக அறிய முடிகிறது. அதன்படி விசாரணைகளை பூரணப்படுத்த எடுக்கும் மேலதிக விசாரணைகள் தொடர்பிலான ஒவ்வொரு படிமுறையையும் 14 நாட்களுக்கு ஒரு முறை தமக்கு அறியத் தருமாறும் முழுமையான விசாரணைகளை தாமதமின்றி நிறைவு செய்து தமக்கு பூரண அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு கையளிக்குமாறு சட்ட மா அதிபர், ஜனாதிபதியின் செயலரிடம் கோரியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த குற்றவியல் விசாரணைகளை துரிதப்படுத்தவும், மேலதிக சாட்சியங்களை உள்வாங்கவும் அந்த அறிக்கை மிக அவசியமானது என்பதை சுட்டிக்காட்டியே அவர் அதன் பிரதி ஒன்றைக் கோரியுள்ளார்.