கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (06) 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை - கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சாகுல் ஹமீட் நௌபர் எனும் நபர் என தெரிய வருகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
முக்கிரியாவ பகுதியில் வயல் காவலுக்காக இரண்டு பேர் சென்று உயரமான குடிசையில் தங்கியிருந்த போது அப்பகுதிற்கு தனது குட்டியுடன் வந்த யானை அந்த உயரமான குடிசையினை இழுத்ததால் அங்கு தங்கியிருந்தவர்கள் கீழே விழுந்ததில் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் மற்றையவர் தப்பிச் சென்றதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
-முஹம்மட் ஹாசில்