
தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய ஆசிரமத்தை உருவாக்கினார்.
இந்தியா மட்டுமின்றி இவருக்கு என்று வெளிநாட்டிலும் பக்தர்கள் உள்ளனர். இதன் காரணமாக இவருடைய செல்வாக்கு உயர்ந்தது.
ஆனால், காலப்போக்கில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சீதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ, அதன் பின் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது, வற்புறுத்தி வேலை செய்ய வைப்பது என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.
ஆனால், இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, கைலாசா என்று ஒரு தனிநாட்டை உருவாக்கி அங்கு தன்னுடைய ஆசிரம நிர்வாகிகளுடன் இருந்து வருகிறார்.
அங்கிருந்த படி தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வரும் இவர், சில மாதங்களுக்கு முன்பு கைலாசாவிற்கான கொடி, கைலாசாவிற்கான பாஸ்போர்ட் போன்றவைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தற்போது, கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் மின்னஞ்சலில் (இ-மெயில்) விண்ணப்பம் செய்யலாம் என்றும், எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மூலம் - இந்திய ஊடகம்