அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள் ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னுக்குக் கொண்டுசெல்லலாம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், எதிர்க் கட்சியினர் வரவு செலவுத் திட்ட யோசனைகளை இலக்கங்களாலும் கணக்கு அறிக்கைகளாலும் விமர்சித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவர்களின் வாதம் ஒருவருடத்துக்கு பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், ஒரு வருடத்துக்குப் பின்னரே இந்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் வெற்றியடைந்துள்ளதா அல்லது தோல்வியுற்றுள்ளதா என தெரிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2005இல் ஆட்சியை கைப்பற்றிய போது உலகப் பொருளாதார நெருக்கடி, சுனாமிப் பேரழிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என பிரதான மூன்று நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தார்.
அன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு பெறுமதி 24.4 டொலர் மில்லியனாக இருந்தது. 98.2 கடன் சுமையை ஒன்பது வருடத்தில் 72.3இற்குக் குறைக்க முடியுமாகியது. நாட்டின் பெறுமதியை 79.4டொலர் மில்லியன் வரை அதிகரிக்க முடியுமாகியது.
இந்த விடயங்கள் அன்று கனவாகவே இருந்தது. இன்றைக்கும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைனளை எதிர்க்கட்சியில் சிலர் கனவு என்றே தெரிவிக்கின்றனர். ஆனால், கனவுகளை நனவாக்கும் குழுவே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.