அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிறைச்சாலையில் கொரொனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஆணைக்குழுவிக்கு நேரடியாக அழைக்காமல் இந்த சாட்சி பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியூதீன் மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவு அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பிரிவில் உள்ள சில கைதிகளுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய நேற்று முற்பகல் 11 மணிக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அவர் தொலை காணொளி ஊடாக ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டார்.
சாட்சி விசாரணைகள் ஆரம்பத்தின் போது ரிஷாட் பதியூதீன் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்டி ஹபீப், சாட்சியாளர் தமிழ் மொழியில் சாட்சியம் வழங்க வாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரினார்.
இதன்போது ரிஷாட் பதியூதீன் குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் சிங்கள மொழியில் சாட்சியம் வழங்கியுள்ளதாகவும், தனக்கு சிங்கள மொழியை பேசுவதற்கும் புரிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறியுள்ளதால் சிங்கள மொழியில் சாட்சியம் வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ரிஷாட் பதியூதீன் சிங்கள மொழியில் சாட்சியம் வழங்கியுள்ளதாகவும் தாக்குதல் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுன என்ற அரசியல் விவாதத்தில் பங்கேற்று சிங்கள மொழியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை தொடர்பிலும் ஆணைக்குழு அவதானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் சாட்சி வழங்கும் போது சிங்கள மொழியில் சாட்சி வழங்குமாறும் தேவையான சந்தர்ப்பத்தில் மாத்திரம் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியை பயன்படுத்துமாறும் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ரிஷாட் பதியூதீனின் சட்டத்தரணிக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய சாட்சியம் வழங்குவதற்கு முன்னர் ஆணைக்குழு உறுப்பினரால் சாட்சிக்கான உறுதி உரை வழங்குமாறு ரிஷாட் பதியூதீனுக்கு அறிவுறுத்தல் விடுத்த போது அவர் அதற்காக தமிழ் மொழியில் நீண்டதொரு கருத்து வெளியீட்டை முன்வைத்துள்ளார்.
"எனது தாய் மொழி தமிழ். தமிழ் மொழியிலேயே நான் கல்வி கற்றேன். எனது தாய் மொழியிலே சாட்சி வழங்க வேண்டும்.
மேலும் தமிழ் மொழியானது அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழியாகும்."
பின்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்கிய போது தமிழ் மொழி அறிந்த சட்டத்தரணி ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு அவரது உதவியை பெற அனுமதி வழங்கப்பட்டது.
"நான் செய்யாத தவறுக்காகவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளளேன். இல்லை எனில் நேரில் வந்து சாட்சி வழங்கியிருக்க முடியும். மொழியே எனது பிரதான பிரச்சினையாகும்.
இதன் காரணமாக எனக்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு அமைய ரிஷாட் பதியுதீனிடம் சாட்சியம் பெறும் செயற்பாட்டை பிற்பகல் 1.30 வரையில் பிற்போட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேரிட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் பணியாற்றும் மொழி பெயர்ப்பாளர் சுகயீனமுற்றிருந்ததன் காரணமாக பிரிதொருவரை அழைக்க நேரிட்டது.