திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அன்புவெளிபுரம் பிரதேசத்தில் நால்வர் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
தமது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட தாக்குதலையடுத்து தாக்குதலுக்கு உள்ளானவரின் உறவினர் நியாயம் கேட்ட நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இருவர் மேலும் இருவருடன் வீடுபுகுந்து வாள் மற்றும் தடகளால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் குறித்த தாக்குதலினால் 39 வயது மற்றும் 65 வயது பெண்கள் இருவர் உட்பட ஐந்து சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தாக்குதல் நடத்திய நால்வரை உப்புவெளி பொலிஸார் தேடி வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.