பேலியகொட மீன் சந்தையின் நுழைவாயிலை மாற்றுவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனான்டோ ஆகியோர் இன்று கள விஜயத்தினை மேற்கொண்டு ஆராய்ந்த நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் மத்திய மீன் சந்தையான பேலியகொட மீன் சந்தைக்கு தினந்தோறும் 5,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சில மணித்தியாலங்களுக்குள் வந்து செல்கின்ற நிலையில், வாகனப் போக்குவரத்து நெருக்கடி சந்தையின் செயற்பாடுகளுக்கு பாரிய இடையூறாக காணப்படுகின்றது.
இந்நிலையில், மீன் சந்தையின் நுழைவாயில் அமைந்துள்ள பகுதியிலேயே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற மரக்கறிச் சந்தையான மெனிக் சந்தையின் நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதனால், குறித்த நுழைவாயில் அமைந்துள்ள பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறை ஏற்படுத்தும் என்று மீன் சந்தை நிர்வாகிகளினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், கொழும்பு, நீர்கொழும்பு வீதியை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பிரதான வீதிக்கு மீன் சந்தையின் நுழைவாயிலை மாற்றித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.