ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “வறுமையற்ற இலங்கை” என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு இலட்சம் விண்ணப்பதாரிகளில் முதற் கட்டமாக 34818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
$ads={2}
தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ளதுடன், பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பயிலுனர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பணிக்காக நியமிக்கப்படுவர்.
ஆட்சேர்ப்புச் செய்யப்படுவோர் அரச விவசாய காணிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள விவசாயம் செய்யமுடியுமான காணிகளில் நவீன விவசாய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளிலும் வன சீவராசிகள், வனப் பாதுகாப்பு, நீர்ப்பாசன கமநல சேவைகள், விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள், கிராமிய வைத்தியசாலைகள், பாடசாலைகள் ஆகிய இடங்களிலும் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
இதேவேளை பயிற்சிக் காலத்தின் போது இவர்களுக்கு 22500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.10.19