பாடசாலைகளிலிருந்து அகற்றப்படும் வெற்று குமிழ் முனைப் பேனைகள் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளில் இருந்தும் வருடமொன்றில் 29,200KG குமிழ் முனைப் பேனைகள் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சு இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் எழுதுகருவியாக பயன்படுத்தும் சுமார் 80KG பேனைகள் குப்பைகளில் வீசப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய அரச மற்றும் தனியார் துறைகளில் இருந்து அகற்றப்படும் வெற்றுப் பேனைகளின் அளவு குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முறையான மீள்சுழற்சி திட்டமொன்று இன்மையால் பாடசாலைகளில் இருந்து தினமும் வீசப்படும் வெற்றுப் பேனைகள் சுற்றாடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் திட்டமொன்று செயற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
குமிழ்முனைப் பேனைகள் மற்றும் பற்தூரிகை ஆகியன உக்கிப்போவதற்கு 50 முதல் 75 ஆண்டுகள் காலம் தேவைப்படுவதனால் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பிளாஸ்டிக், பேனைகள் மற்றும் பற்தூரிகைகளை மீள் சுழற்சி செய்வதற்கு பொருத்தமான வழிமுறைகள் உருவாக்கப்படுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.