கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் இந்தியாவில் இருந்து ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது அம்பலமானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் இந்தியாவில் இருந்து ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது அம்பலமானது!

பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் பின்னணி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி புதன்கிழமையன்று, கஞ்சிபானை இம்ரானின் தந்தை மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நஜீம் மீது மாளிகாவத்தை சத்தர்ம மாவத்தையில் வைத்து பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவரால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் மாளிகாவத்தை பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கும் விசாரணைகளில் இந்தியாவுக்கு தப்பிச் சென்று மறைந்துள்ள பாதாள உலகத் தலைவன் புக்குடு கண்ணா இந்த தாக்குதலை நெறிப்படுத்தியுள்ளதாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மூவரும், தாக்குதலுக்கான ஒப்பந்தத்தை ஏற்ற நபரும், உதவி ஒத்தாசை புரிந்த ஒருவருமாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் இருவர், மட்டக்குளி - காக்கை தீவு ஊடாக இந்தியவௌிக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த தினம், முதலில் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நஜீம் வசிக்கும் வீடு நோக்கி சென்றுள்ள  தாக்குதல்தாரிகள், அங்கு அவர் தொடர்பில் விசாரித்துள்ளனர்.

அவர் இல்லாததால் மீள வீதிக்கு வந்துள்ள அவர்கள், தமக்கு ஒப்பந்தம் வழங்கியவருக்கு விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்கு  மாரிமுத்து கணேஷ் எனும் மன்ன கன்னா, மகேந்ரன் பிரதீப் எனும்  பாச்சா உள்ளிட்ட  மூவரே சென்றுள்ளதாக பொலிஸார் CCTV காணொளிகள் ஊடாக வெளிப்டுத்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நஜீம் வீட்டில் இல்லாத நிலையில் திரும்பிய தாக்குதல்தாரிகளுக்கு இந்தியாவில் இருந்து புக்குடு கண்ணா, வட்ஸ்அப் ஊடாக குரல் பதிவொன்றினை அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், கஞ்சிபானை இம்ரானின் தந்தை மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நஜீம் சிறிது நேரத்தில் சத்தர்ம மாவத்தை ஊடாக செல்வார் எனவும் அப்போது அவரை வெட்டுமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மாளிகாவத்தை சத்தர்ம மாவத்தையில் சந்தேக நபர்கள் பஸ் தரிப்பு நிலையம் அருகே முச்சக்கர வண்டியை நிறுத்தி காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நஜீம் அவ்வழியால் வரும்போது முதலில் மன்ன கன்னா வாளால் வெட்டியுள்ள நிலையில் ஏனைய இருவரும் இணைந்து அதன் பின்னர் வெட்டியுள்ளனர். அந்த வாள் வெட்டுத் தாக்குதல்கள் 10 செக்கன்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதன் பின்னரேயே சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்கள் தப்பிச் செல்லும் போது போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்,  முச்சக்கர வண்டியை மறித்து முச்சக்கர வண்டியுடன் மன்ன கண்னாவைக் கைது செய்துள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய மட்டக்குளி காக்கை தீவு பகுதியில் வைத்து பாச்சா மற்றும் சுதா உள்ளிட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், முகத்துவாரம் பகுதியில் வைத்தும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம், கடந்த 2018 ஆம் ஆண்டு  முகத்துவாரம் தபால் நிலையம் அருகே, புக்குடு கண்ணாவின் தந்தை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.

அந்த கொலையை குடு செல்வியின் தரப்புடன் இணைந்து கஞ்சிபானை இம்ரானின் குழுவே செய்ததாக புக்குடு கண்ணா நம்பும் நிலையிலேயே, கஞ்சிபானை இம்ரானின் தந்தையையும் அதே பாணியில் வெட்டிக் கொலை செய்ய ஒப்பந்தம் கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில்  புக்குடு கண்ணாவின் ஒப்பந்தை பொறுப்பேற்ற நபரும் கைதானோரில் அடங்குவதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறினார்.

கைதானவர்களில், மன்ன கன்னா இன்று  தடுப்புக் காவல் உத்தரவு நிறைவடைந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதிவான்  காஜ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கு மேலதிகமாக  மகேந்ரன் பிரதீப் அல்லது பாச்சா,  சுவாமிநாதன் எனும் சுதா உள்ளிட்ட மூவரை 24 மணி நேரம் மேலதிகமாக தடுத்து வைக்க பொலிஸார்  நீதிவானின் அனுமதியைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையிலேயே இன்று மாலை 5ஆவது சந்தேக நபரையும் முகத்துவாரம் பகுதியில் வைத்து மாளிகாவத்தை பொலிஸார் கைதுச் செய்தனர்.

கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்ஹிரு செவன தொடர்மாடி குடியிருப்பிற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதான சந்தேக நபரிடமும், பொலிஸ் தடுப்பில் உள்ள மூவரிடமும் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.