ராமேஸ்வரத்ததை சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, சீனி ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
அன்று இரவு மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விசைப்படகின் இஞ்சினில் இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் பழுதாகியுள்ளது.
இதனால் படகில் இருந்த மீனவர்களால் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அப்போது விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக இலங்கையின் மன்னார் கடல் பகுதிக்குள் சென்றுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை மாலை அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், படகையும் மீட்டு சர்வதேச கடல் எல்லையில் வைத்து விசாரணை நடத்தி பின் இந்திய கடலோர பொலிஸாருக்கு சொந்தமான ராணி துர்க்கா தேவி என்ற ரோந்து கப்பலில் மீனவர்களையும் விசைப்படகையும் ஒப்படைத்துள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட நான்கு மீனவர்களையும், படகையும் இந்திய கடலோர பொலிஸார் கப்பல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே வைத்து நேற்று மாலை சக மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின் கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் உளவுத்துறை, வட்டாச்சியர், கடலோர காவல் குழுமம் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.