சீனாவின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுதும் அதிக அளவில் பரவிவருகிறது. இதனால் வெளிநாடுகளில் வாழும் சீனர்கள், இனப்பாகுபாடு மற்றும் வன்முறைச்சம்பவங்களுக்கு ஆளாக நேரிடலாம். எனவே, படிப்புக்காக பிற நாடுகளுக்கு செல்ல வேண்டுமா என, சீன மாணவர்கள் சிந்திக்கவேண்டும்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், 'சிட்னி மார்னிங்ஹெரால்ட்' என்ற ஊடகம், கடந்த ஏப்., 2ம் தேதி முதல் இதுவரை, இனவெறி தாக்குதல் தொடர்பான 386 சம்பவங்கள் நடந்துள்ளதாகதெரிவித்துள்ளது. எனவே, தங்களது படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமா என, சீன மாணவர்கள் ஆலோசிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைச்சர் சைமன் பர்மிங்காம் கூறுகையில், 'ஆஸ்திரேலியாவில் இனவெறிக்கு எதிரானசம்பவங்கள் நடக்கவில்லை எனக் குறிப்பிட மாட்டேன். ஆனால், இனவெறியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை' என்றார்.
'கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக, சீனாவின் மீது சர்வதேச விசாரணையைத் தொடர வேண்டும் என, ஆஸ்திரேலியா கூறியது. இதனால், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ளபல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில், 10 சதவிகிதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் டாலர்கள் வரை கட்டணமாக செலுத்துகிறார்கள். அவர்களை அங்கு செல்லவிடாமல் செய்தால், ஆஸ்திரேலிய கல்விநிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தலாம். அந்த நெருக்கடியை கொடுக்கவே சீனா இவ்வாறு அறிவித்துள்ளது' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.