உலகளாவிய ரீதியில் மிக வேகமாக வரவி உயிர்களைக் காவுகொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பிரான்ஸில் இன்று நள்ளிரவு முதல் சில தடைகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள் (Restaurants), அருந்தகங்கள் (café -Bar), திரையரங்குகள் என அனைத்தும் உடனாடியாக இன்று (15) நள்ளிரவுடன் மூடப்படல் வேண்டும் என பிரதமர் எதுவார் பிலிப் அதிரடியான உத்ததரவை வழங்கி உள்ளார்.
மக்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்குமாறு கோரி உள்ளார்.
ஆனால் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள், மருந்தகங்கள், போன்ற சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக, 14 நாட்களுக்கு சம்பளக் கொடுப்பனவுடன் வீடுகளில் பிள்ளைகளை பராமரிப்பதற்கு வழிசெய்துள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட இருக்கின்ற நிலையில், பிள்ளைகளை வீடுகளில் பராமரிக்க ஏதுவாக இதனை அரசாங்கம் அறிவித்துள்ளது.
16 வயதுக்கு குறைவான பிள்ளைகளை கொண்டிருக்கின்ற பெற்றோர்கள், பிள்ளைகளை வீடுகளில் பராமரிக்க விரும்பின், தொழில்புரிகின்ற நிறுவனத்தின் ஊடாக பதிவினை செய்து இச்சலுகையினை பெற முடியும். அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் குறித்த வேலையை செய்ய முடியாதவர்கள் இந்த சலுகையினை பெறுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 14 நாட்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட இருப்பதாகவும், பின்னர் அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

