
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சார்பில் இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை வழங்குகிறோம் என இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உத்தரபிரதேசம் அயோத்தியில் பாபர் மஸ்ஜித், இராமர் ஜென்ம பூமி அமைந்துள்ள இடம் யாருக்கு என்பது குறித்த வழக்கிலேயே இந்திய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட மத்திய அரசாங்கம் ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் புதிய மஸ்ஜிதை கட்டுவதற்கு நிலத்தை வழங்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து ஏற்கனவே, அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு. கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லிம் அமைப்புகள் தவறி விட்டன. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என உயர் நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
பாபர் மஸ்ஜித் இருக்கும் இடம் முழுக்க முழுக்க தங்களிற்கு சொந்தமானது என்பதை முஸ்லிம்கள் நிரூபிக்க தவறிவிட்டனர் என இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.