
ஜனாதிபதி மேற்கொள்ளும் நாட்டுக்கு நன்மையான விடயங்களுக்கு ஆதரவளிக்க பின்வாங்கமாட்டோம்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு 10 இலட்சம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. என்றாலும் அதனை மறைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும்போது தான் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளால் மாத்திரமே வெற்றிபெற்றதாக தெரிவித்திருந்தார்.
இது யாராவது அவருக்கு தெரிவித்ததையே அவர் குறிப்பிட்டிருக்கவேண்டும். கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு 10 இலட்சம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அதனை மறைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதாவது, நாட்டில் இருக்கும் 7ஆயிரம் பிரதான விகாரைகள் ஊடாக ஒரு விகாரையில் இருந்து ஆயிரம் வாக்குகள் அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள தேர்தல் காலங்களில் தேரர்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பிரகாரமே 69 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றதாகவும் ஒருசில தேரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் இனவாத அடிப்படையில் வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால், ஹிஸ்புல்லாவுக்கோ , சிவாஜிலிங்கத்துக்கோ வாக்களித்திருக்க வேண்டும்.
மாறாக தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இனவாதம் மற்றும் தேசியவாத பிரசாரத்தில் சிறுபான்மை மக்கள் இனவாதத்துக்கு எதிராக செயற்பட்டு தேசியவாத கொள்கையில் இருந்த, சிறந்த பெளத்தரான சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருக்கின்றனர்.
மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பதவி ஏற்கும்போது பல நல்லவிடங்களை தெரிவித்திருந்தார். அவற்றை நாங்கள் வரவேட்கின்றோம். குறிப்பாக தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி என தெரிவித்து அந்த மக்களையும் இணைத்துக்கொண்டு செயற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நல்லவிடயங்களை யார் செய்ய முற்பட்டாலும் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க பின்வாங்கமாட்டோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.