உக்ரைன் மீது ரஷியா இன்று 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன.
மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (15) முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தகவலை ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ளது.